Monday, April 27, 2020

சோழர் செப்பேடுகள் 2


சோழர் செப்பேடு -2

உதயந்திரம் செப்பேடு.
முதாலாம் பராந்தகன்.
கி.பி. 922

சோழர்களது செப்பேடுகளில் காலத்தால் மிகவும் மூத்தது உதயேந்திரம் செப்பேடு ஆகும்.
கி.பி. 1850 ஆண்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள உதயேந்திரம் என்னும் ஊரின் சௌந்திரராஜபெருமாள் கோவில் தர்மகர்த்தாவிடம் இச்செப்பேடு தொகுதிகள் இருந்தது.
இச்செப்பேட்டை வாசித்த கல்வெட்டாய்வாளர் திரு ஹூல்சு அவர்கள் தென்னிந்திய கல்வெட்டுத்தொகுதி எண் 2 பாகம் 3 ல் 76 ம் எண் சாசனமாக பதிப்பித்தார்.
மதுரை கொண்ட கோபரகேசரி பராந்தகனின் 15 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்டது.


இச்செப்பேட்டில் 7 பட்டைகள் உள்ளன. செப்பேட்டின் முதல் பகுதி வடமொழியிலும், இரண்டாம் பகுதி தமிழ் மொழியிலும் உள்ளது.
907 ல் ஆட்சிக்கு வந்த பராந்தகசோழனின் 15 ம் ஆட்சியாண்டில் இச் செப்பேடு வெளியிடப்பட்டதால் இச்செப்பேட்டின் காலம் கி.பி. 922.
கங்கமன்னன் இரண்டாம் பிருத்விபதியின் வேண்டுகோளை ஏற்று,
உதயச்சந்திரமங்கலம் என்னும் ஊரில் வாழும் பிராமணர்களுக்கு இரண்டு கிராமத்தை தானமாக வழங்கினார் சோழ வேந்தன் பராந்தகன். தானமாக வழங்ப்பட்டபகுதி வீரநாரயணச்சேரி என்று பராந்தகனது பெயராலே வழங்கப்பட்டது. இதற்கான அரச ஆணைதான் உதயேந்திரம் செப்பேடு.
இச்செப்பேட்டில் அதிமுக்கியமான வரலாற்றுத்தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.



சோழ சரித்திரத்தில் மிகப்பெரும் பங்காற்றிய திருப்புறம்பியம் போர் பற்றிய குறிப்பு இச்செப்பேட்டில் மட்டுமே காணப்படுகிறது.
இனி செப்பேட்டில் காணப்படும் செய்திகளின் அவசியாமானவைப் பற்றியத் தொகுப்பு.
முதல் பகுதியில் சோழ அரச பரம்பரை பற்றியும், இரண்டாம் பகுதியில் கங்க மன்னர்களின் வரிசையும் உள்ளன. பிறகு தானம் பற்றிய செய்தி..
ஆரம்ப செய்யுட்கள் கடவுள் வாழ்த்துகளுடன் துவங்குகின்றன.
செய்யுள் 1&2
பெருமாள், சிவன், பிரம்மா, வாழ்த்துகள்.

செய்யுள் 3

திருமாலின் நாபியிலிருந்து பிரம்மா தோன்றினார். பிறகு மரீசி. அதன் பிறகு கோத்திரத்தை உருவாக்கிய கச்யபர், அதன் பிறகு சூரியன். பிறகு ருத்திரசித், சந்திரசித் .. இந்தக் குலத்தில் அரசர்களின் உத்தமனான சிபி தோன்றினான். அவன் புறாவை காத்தவன்.

செய்யுள் 4 - 11

கோக்கிள்ளி, சோழன், கரிகாலன், கோச்செங்கணான் போன்ற அரசர்கள் தோன்றிய சோழர்குலத்தில் வெற்றித்திருமகனான விஜயாலயன் தோன்றினான். அவனுக்கு மகனாக ஆதித்தன் பிறந்தான். அந்த ஆதித்தனுக்கு மகனாக ஸ்ரீவீரநாரயணன் ( பராந்தகன்) தோன்றினான். எதிரிகளுக்கு காட்டுத்தீ போன்றவன் கோவில்கள் எடுப்பது போன்ற காரியங்களில் ஈடுபட்டான்.கேரள அரசனின் மகளை மணந்தான். இரு பாண அரசர்கள் மற்றும் வைதும்பர்களை வென்றான். பாண்டியர் தலைவனை போரில் சீர்குலைத்த அவனது படை மதுரையை கைப்பற்றியது. பாண்டியன் இராசசிம்மன் தோற்று பின்வாங்கினான்.

செய்யுள் 12 

முதல் கங்கர்களின் வம்சம் பற்றிய செய்திகள் ...
கங்கர்குல முதல்வன் கொங்கணி , பாணர்களை வெல்வதற்காக பட்டாபிசேகம் செய்யப்பட்டான். ஸ்ரீவிஷ்ணுகோபன், அரி, மாதவன், துர்வினீதன், பூவிக்ரமன் பிறப்பால் பெருமைகொண்ட கங்கர் குலத்தில் சிவமாரனின் மகனாக பிருதிவீபதி ( முதலாம்)
தோன்றினான்.
உதயேந்திரம் செப்பேட்டின் 18 வது செய்யுள் திரும்புறம்பியம் போர் பற்றிய செய்தியை பதிவு செய்கிறது.
வீரனான பிரிதிவீபதி திரும்புறம்பியத்தில் நடந்த போரில் வரகுணபாண்டியனை வென்றான். அபராஜிதனின் வெற்றியை உறுதி செய்துவிட்டு அப்போர்க் களத்தில் இறந்தான்.

செய்யுள் 19 - 28

முதலாம் பிருதிவீபதியின் மகனாக மாரசிம்மன்.அவனுக்கு (இரண்டாம்) பிருதிவீபதி பிறந்தான். இவன் அரசர்களில் சிங்கம் போன்றவன். பராந்தகச் சோழனிடமிருந்து பாணர்களுக்கு அரசனாகும் ஆணையான மாவலிவாணராயன் என்னும் பட்டம் பெற்றான். மகாபலியின் வழிவந்த பாணர்களின் அரசு அவனுக்கு வழங்கப்பட்டது அத்திமல்லன் என்னும் பெயரைப் பெற்றான். தான் வழங்கும் தானத்தை பராந்தகச் சோழன் பாதுகாக்கவேண்டும் என்று தலையால் வணங்கி கேட்கிறான். கடைக்காட்டூர் என்று பெயருள்ள கிராமத்தை உதயச்சதுர்வேதிமங்கலத்திற்குக் கொடுத்தான்.சமணர்களுக்கு உரிமையான இரண்டு பட்டிகளை விலக்கி அரசன் நிலத்தை வணங்கினான்.
அடுத்தப்பகுதியில்....

அரசனின் ஆணையும், நில எல்லைகளும் வரையறை செய்யப்படுகின்றன.
இத்துடன் இச்செப்பேட்டு செய்திகள் நிறைவு பெறுகின்றன..
இச்செப்பேட்டில் நமக்கு கிடைக்கக்கூடிய அவசியத்தரவுகள்.
விஜயாலயன் மகன் ஆதித்தன். அவனது மகன் பராந்தகன். அவன் கேரள இளவரசி ஒருவரை மணந்தான். வாணர் மற்றும் வைதும்பர்களை வென்றான். இராசசிம்ம பாண்டியனை வென்று மதுரையைக் கைப்பற்றினான்.
திருப்புறம்பியம் போர் பற்றிய செய்தி இச்செப்பேட்டில் மட்டுமே காணப்படுகிறது. வேறு எந்த ஒரு சோழர் சாசனத்திலும் திருப்புறம்பியம் போர் பற்றிய செய்தி இல்லை.
சோழ கங்கர்களின் உறவு மற்றும் கங்க அரசர்களின் பட்டியலும் இச்செப்பேடு மூலம் நமக்குக் கிடைக்கிறது..
அடுத்த செப்பேடான வேளஞ்சேரி செப்பேடு..
தொடர்வோம்..


அன்புடன்
எழுத்து ; மா.மாரிராஜன்.
Refrence
சோழர் செப்பேடுகள். க. சங்கரநாரயன்.





S.i.i.vol 2. No. 76.

1 comment: