தடங்களைத் தேடும் தடங்கள்
தடம் 1 பயணம் 1
உத்தமசீலி
(எழுத்து /படங்கள் : திருச்சி பார்த்தி )
இக்கட்டுரைத் தொடர் நம் சோழ வரலாற்று ஆய்வு சங்கத்தினர், நம் பண்டைய தடம் தேடிப் பயணித்த பொழுது கிடைத்த சுவாரசியங்கள், அனுபவங்கள், சந்தித்த இடர்கள், இவற்றைப் பிறருக்குச் சொல்ல விழையும் ஒரு சிறிய முயற்சி! பெற்ற 'நல் அனுபவம்' என்னும் சுவையான கனியை மட்டும் கொடுப்பதோடு நில்லாமல், அதைப் பறிப்பதற்குப் பட்ட காயங்களையும் உங்களிடம் பகிர்ந்தால் தான், எங்கள் தடம் வழி பயணிக்கும் நீங்களும் நிதானமாய் அடியெடுத்து வைக்க உதவியாக இருக்கும். இக்கட்டுரைத் தொடர் ஒரு கைகாட்டியாய் அமைய வேண்டும் என்பதே எங்கள் குழுவின் அவா!
சித்தர் வாக்குப் படி, "கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் "
எனும் உயரிய கூற்றின்படி, நாங்கள் கண்டதை விண்டு வைக்கக் கொண்ட முயற்சி இது! வாருங்கள் பயணிப்போம்!!!
முதல் பயணம் :
காவிரி, கொள்ளிடம் எனும் இருபெரும் சமுத்திர நிகர் ஆறுகளைப் பெற்றிருக்கும் திருச்சியிலிருந்து ஆரம்பிப்போம்!
"உத்தமசீலி" -
பலமுறை நம் குழுவினர் இவ்வழியே பயணித்துள்ளோம், இப்பெயரைக் கேட்கும் பொழுது, ஏதோ ஒரு உறுத்தல், உந்துதல்! காரணம், பராந்தகரின் கடைசிப் பிள்ளை "உத்தமசீலி " பெயரில் கிடைக்கும் கல்வெட்டுகள் மிகச்சொற்பம்; மேலும், வீரபாண்டியன் இவரைக் கொன்றுதான், "சோழன் தலை கொண்ட பாண்டியன் " எனும் பெருமை பூண்டான் என்ற வரலாற்றுச் சான்றோர்களின் கருத்து வேறு! இவர் நேரடியாய் நிவந்தம் கொடுத்த கோவில்கள் சில மட்டுமே (கண்டியூர், திருவிடைமருதூர், குற்றாலம்) . வேறு எங்கிலும் இம்மன்னரின் பெயரைக் காண இயலவில்லை! ஆகவே, இயல்பாகவே ஒரு ஆர்வம் இவ்வூரின் மேல் ! ஒரு நல்ல நாள் பார்த்து (விடுமுறை நாள்)பயணிக்க யத்தனித்தோம்! அந்த நாளும் வந்தது!
கல்லணையிலிருந்து திருச்சி செல்லும் வழியில் சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இந்த ஊர் ! சென்ற முறைசென்ற பொழுது தெளிவாய் தெரிந்த பெயர்ப்பலகை, இம்முறை ;லோக்கல்' ஜாதிகட்சி 'போஸ்டர்' உபயோகத்தால் முழுவதும் மறைந்துவிட்டது! சந்தேகத்தின் பெயரில், இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அந்த போஸ்டரை சிறிது கிழிக்க முற்பட்டோம்! அவ்வளவுதான் தாமதம்! ஓடி வந்துவிட்டனர் அந்த 'போஸ்டர்' ஒட்டிய சிங்கங்கள், தடித்த வார்த்தைகளால் சப்தமிட்டுக்கொண்டே !
ஒருவாறு பேசி சமாளித்து, பின் அவர்களிடமே விசாரித்தோம்! என்ன விசாரிப்பது என்று தெரியாமல் முழித்து, பொத்தாம்பொதுவாய் "சிவன் கோவில் ஏதும் உள்ளதா தல இங்கே!?" அப்டின்னு கேட்டோம்! பின் அதிலுள்ள பெரியவர், 'கிழக்கு பக்கம் செல்லுங்கள்; பழைய சிவன் கோவில் இருக்கும்! பூட்டி இருக்கும், வெளிய இருந்து சாமி கும்பிட்டு வந்துருங்க தம்பிகளா' ன்னு சொல்லிக்கொண்டே கிளம்பிவிட்டார்!
கிட்டத்தட்ட பன்னிரண்டு நபர்களை விசாரித்து கோயிலை வந்தடைந்தோம்! வெளியிலிருந்து பார்த்த பொழுது கோயில் கோபுரம் தெரிந்தது!
அங்கே சென்றால் அழகிய கற்றளி! சிறப்பானதாய் இருந்திருக்கும் ஒருகாலத்தில்! புள்ளமங்கை கோவிலை ஒத்த அமைப்பு, அழகிய பட்டி, குமுதம், வேதிகை!
தொல்லியல்துறை எடுத்து வேலைபார்த்த(😏) அடையாளமாய் சுவர்களில் எண் இருந்தது, கோவிலைச் சுற்றியுள்ள சிறிய பலகங்களில் இராமாயண, சிவபுராண சிற்பங்கள் ; 95% அழிந்துவிட்டது! மீதியும் அதிவிரைவில் அழிந்துவிடும்! இறைவனின் திருப்பெயர் கைலாசநாதர், இப்பெயர் புதிதாக வைத்த பலகையில் இருந்தது! இதுதான் உண்மையான பெயரா, இல்லை புனைப்பெயரா என்று தெரியவில்லை! கல்வெட்டுகள் தேடியபோது, அதற்கான அறிகுறி ஏதும் இல்லை, அந்த அளவிற்கு சிறப்பாய் பூச்சு வேலை இருந்தது! இருந்தாலும் மனம் தளராத விக்கிரமாதித்தனாய் தேடினோம், தெற்குப்புர பட்டியில் ஸ்வதி.. என்ற வாக்கியம் தெரிந்தது,மனம் குதூகலித்தது, மகிழ்ச்சியில் மீண்டும் அத்தாச்சியிடம் சென்று இரண்டு வாளி நிறைய நீர் நிரப்பிக் கொண்டு வந்தோம். தேங்காய் நாரும் கொடுத்தார்,
பின் கிட்டத்தட்ட 1/2 மணிநேரம் போராடி, தேய்த்ததில் "ஸ்வதிஸ்ரீ விக்கிரம சோழ... யாண்... " இது மட்டும் தான் கிடைத்தது (யுரேகா, யுரேகா)
இக்கோவிலின் பண்டைய சிறப்பு என்னவோ! அவ்வரசகுமரன் பெயரில்தான் இன்றும் வழங்கி வருகிறது!
கல்வெட்டுகள் முழுதும் கிடைத்திருந்தால் ஒருக்கால், சில புதிர்களுக்கு விடையாய் அமைந்திருக்கும்! மதியம் 12 ஆனது, அத்தாச்சிக்கு மனதார நன்றி கூறிப் புறப்பட்ட போது, 'அருகே பெருமாள் கோவில் உள்ளது அங்கும் செல்லுங்கள்' என்றார். நன்றி கூறி அடுத்த கோவிலை நோக்கிப் பயணித்தோம்!
வழக்கம்போல் நடை சாத்தியிருந்தது, அருகே விசாரித்து கெஞ்சிக் கூத்தாடி அர்ச்சகரை அழைத்து வந்து திறந்தோம். பெருமாள் நின்ற நிலையில் எங்களுக்குக் காட்சியளித்தார்!
கோவில் முழுக்க கல்வெட்டுகள் நிறைந்திருக்க வேண்டும், தற்சமயம் முதலாம் குலோத்துங்கன் கல்வெட்டு ஒன்று மட்டுமே சிக்கியது! கோவில் அடித்தளத்திலிருந்து சுமார் 5 அடி சிமென்ட்டால் உயரம் எழுப்பியுள்ளனர், பாதித் தகவல்கள் உள்ளே நிம்மதியாய் உறங்குகின்றன !
ஏக்கப்பெருமூச்சுடன் தரிசித்துவிட்டுக், கிளம்பினோம்!
இன்றைய தேடலில் ஏதும் பெரிதாய் மாட்டவில்லை என்று ஏங்கியபோது, அர்ச்சகர் வரலாற்றுப் பொக்கிஷமான ஒரு கோவிலுக்கு செல்லும் வழியைக் கூறிச் சென்றார்!
ஆம்! அவ்வூரின் பழைய பெயர் "உத்தமசீலி சதுர்வேதி மங்கலம் "
சிறிது இடைவெளி கழித்து பயணிப்போம் வாருங்கள்!
(தொடரும்)