மனதை மயக்கிய மாமல்லை - பாகம் 2-
பிற்பகல்
அதன்பின் முத்துக்குமார் அவர்களின் அயராத உரையில் மகிஷியையும் போர்க் காட்சிகளையும் பூதகணங்களையும் திரிவிக்கிரமரையும் ஈசனையும் கண்ட பரவச உணர்வு நீங்கவேயில்லை .
இடையே எழுத்தாளர் வெற்றியின் வானவில்லி பற்றிய மணிவண்ணன் ஐயாவின் அற்புதமான அணிந்துரையும் வெற்றியின் ஏற்புரையும் மிக நெகிழ்ச்சி !
வெண்ணெய் பாறை ! யானைகளும் யானையளவு முயற்சிகளும் அசைத்துக்கூடப் பார்க்க முடியாத கம்பீரம். காலங்களைக் கடந்து அனைத்தையும் கண்டுகொண்டு அமைதியாய் நிற்கிறது வெண்ணெய் பாறை. நாம் அதனடியில் சற்று இளைப்பாறினோம்.
நாளின் உச்சபட்ச அனுபவமாய் கடற்கரை கோவில்தரிசனம். ஒவ்வொருகல்லும் ஆயிரம் கதை கூறும்.அறிந்த நண்பர்கள் விளக்கிக்கொண்டு வருகையில் நடந்தது அந்நிகழ்வு! நடந்த நண்பர் பாரி திடீரென நின்றார். குனிந்து தரையை நோக்கினார். ஆகா!
முல்லைக்குத் தேர்கொடுத்தான் மன்னன்பாரி அன்று! மல்லையில்சோழர் கல்வெட்டில் நம் நாயகனின் பேர் படித்தான் நண்பன் பாரி இன்று! ஆம். நம் சோழசரித்திர நாயகனின் பெயர் பல்லவராஜ்ஜியத்தில்!
கண்ட கல்வெட்டின் விவரங்களைக் கீழே காணலாம் ! தொடருகின்ற கல்வெட்டுப் பிரதியின் படத்தின் 13வது வரியே மேலே சுட்டிக்காட்டப்படுவது.
கல்வெட்டு விவரங்கள் பற்றி. குடவாயில் பாலசுப்பிரமணியம் ஐயா அவர்களின் கூற்று: :
"மேற்கு நோக்கித் திகழும் சிவாலயத்தின் வெளிப்புறம் தெற்கு மற்றும் வடக்கு தரைதளத்தில் மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழனின் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. அவைதாம் இக்கோயிலின் வரலாற்றை மேலும் தெளிவு படுத்துகின்றன.
இக்கோயிலினை மாமன்னன் ராஜராஜசோழன் ‘‘ஜலசயனம்’’ என்ற பொதுப்பெயரால் குறிப்பிட்டிருப்பதோடு அதில் திகழும் கிழக்கு நோக்கிய சிவாலயத்தை ‘‘க்ஷத்திரிய சிம்ம பல்லவ ஈஸ்வரகிருஹம்’’ என்றும், மேற்கு நோக்கிய சிவாலயத்தை, ‘‘ராஜசிம்ம பல்லவ ஈஸ்வர கிருஹம்’’ என்றும், நடுவில் திகழும் விஷ்ணு ஆலயத்தை பள்ளிகொண்டருளிய தேவர் கோயில் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
க்ஷத்திரிய சிம்ம பல்லவன், ராஜசிம்ம பல்லவன் என்ற இரண்டாம் நரசிம்ம பல்லவன் பெயராலேயே அச்சிவாலயங்கள் ராஜராஜசோழனால் அழைக்கப்பெற்ற பண்புநெறியை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கடற்கரைக்கோயில் ஜலசயன தேவர் கோயில் என்ற பொதுப் பெயராலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அழைக்கப்பெற்றதை இச்சாஸனம் எடுத்துரைக்கின்றது.
ஆமூர் கோட்டத்து ஆமூர் நாட்டு நகரம் (வணிக மையம்) ஆன மாமல்லபுரத்து ஊர் நிர்வாக அமைப்பான நகரத்தாரும், பேரிளமையார் எனப்பெறும் உழுகுடி வேளாண் மக்களும் இணைந்து இக்கோயில்களுக்கு அளித்த பொற்கொடை பற்றி ஒரு சாஸனம் எடுத்துரைக்கின்றது.
மற்றொரு கல்வெட்டோ ராஜராஜசோழனின் அதிகாரியான புதுக்குடியான் ஏகதீரன் ஐம்பதின்மன் என்பான் மாமல்லபுரத்து நிலங்களை நூறு பங்குகள் உள்ள நான்கு பிரிவுகளாகப் பகுத்து அவற்றில் 25 பங்குகளை அவ்வூரில் உள்ள கடும்பிடுகுச்சேரி என்ற பகுதியைச் சார்ந்த சங்கரம்பாடியார் (எண்ணெய் வாணியர்) வசமும், மற்ற 75 பங்குகளை மற்ற அனைத்துக் குடியினருக்கும் கொடுத்ததை விவரிக்கின்றது.
மாமல்லபுரத்து ஜலசயனம் என்னும் கடற்கரைக்கோயில் திருமங்கையாழ்வார் காலத்துக்கு முந்தையது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. தற்போது மாமல்லையில் உள்ள தலசயனக் கோயில் கி.பி.12ம் நூற்றாண்டுக்கு முந்தைய சிற்பங்களோ, கல்வெட்டுகளோ காணப்பெறவில்லை"
கட்டுரையின் முத்தாய்ப்பாய் என் உணர்வினை விளக்க ஓர் அசட்டுக்கவிதை !
இதுகாறும் நாம் பார்த்த
மல்லை இது இல்லை!
இன்று கண்ட காட்சிகள்
பிரமிப்பின் எல்லை!
இச்சரித்திர உணர்வைப்
பரப்புவோம் இது திண்ணம்!
அதுவே இக்குழுவின் எண்ணம்!
இது இறைவனின் கைவண்ணம்!
நன்றி!
எங்கள் பரிந்துரை :
1. புலிக்குகை
2. தலசயனப்பெருமாள் கோவில்தரிசனம்
3. அர்ஜுனன் தபஸ்
4. ஐந்து ரதம்
உணவு
5. கலங்கரை விளக்கம் (முடிந்தால் )
6. மகிஷாசுரமர்தினி
7. வரிசையாக சிற்பமண்டபங்கள்
8. வெண்ணை பாறை
9. கடற்கரை கோவில்
*************************************************************************
எழுத்து : ஸ்ரீராம்
படங்கள் : முத்துக்குமார்
கல்வெட்டு விவரங்கள்: நன்றி : திரு.குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்கள்