எசாலம் செப்பேடு.
இராஜேந்திரனின் 25 ஆம் ஆட்சியாண்டு.
கி.பி.1037.
விழுப்புரம் அருகே உள்ள எசாலம் என்ற கிராமம். இக்கிராமத்தில் உள்ள இராமநாதசுவாமி ஆலயம். 1987 ம் ஆண்டு, ஆகஸ்ட் 11 ம் தேதி இக்கோவில் பராமரிப்பு பணியில் ஒரு கற்பலகையை நகர்த்தியபோது அதனடியில் இருபத்தாறு திருமேனிகளும், இந்த செப்பேட்டுத் தொகுதியும் கிடைத்தது.
செப்பேட்டு விபரங்கள் தொல்லியல் அறிஞர் ஆர். நாகசாமி அவர்களால் பதிப்பிக்கப்பட்டு தொல்லியல்த்துறை வெளியீடாக வெளிவந்தது.
முகப்பு இலச்சனையுடன் கூடிய 15 பட்டைகள் உள்ளன.
வழக்கமான மற்ற செப்பேடு முத்திரையை விட இம்முத்திரையில் கூடுதல் விபரங்கள் உள்ளன.
அமர்ந்துள்ள புலியின் முன் உள்ள இரு மீண்கள், பாண்டியர்களை வென்றதைக் குறிப்பிடும். கிடைமட்டமாய் உள்ள வில் சேரர்களை வென்றதை குறிக்கும். புலியின் பின்புறம் ஒரு விளக்குத்தாங்கி, ஒரு வாள், ஒரு அம்பு மற்றும் அங்குசமும் உள்ளது. மீனின் பின்புறம் விளக்குத்தாங்கி ,வாள் , அம்பு மற்றும் ஒரு கோடாரி உள்ளது. வில்லின் கீழே சூலம், தோரணம், மற்றும் சாளுக்கியர்களை வென்றதன் அடையளமாய் பன்றி உருவமும் காணப்படுகிறது. மேற்புரம் கொற்றக்குடையும் இருபுறம் கவரிகளும் உள்ளன. கவரிகளுக்கு மேலே ஒரு சுவஸ்திக் சின்னம் மற்றும் ஒரு சக்கரமும் உள்ளது. இச்சக்கரம் பல நாடுகளை வென்ற இராஜேந்திரனின் அடையாளமாகப் பொறிக்கப்பட்டிருக்கலாம் என்பது ஆய்வாளர்கள் கருத்து. இவ்வமைப்பு இந்த செப்பேட்டில் மட்டுமே காணப்படுகிறது.
இலச்சினையில் ராஜேந்திரனின் சாசன சுலோகம் எழுதப்பட்டுள்ளது.
" ராஜத் ராஜன்ய மகுட ச்ரேணி ரத்னேஷூ சாஷநம் ஏதத் ராஜேந்த்ர சோளஸ்ய பரகேசரி வர்ம்மண."
அரசர்களின் மகுடங்களில் ரத்தினம் போன்றும் திகழும் இது பரகேசரி வர்ம்மனான இராஜேந்திர சோழனின் சாசனம்.
இராஜேந்திரச் சோழனின் குருவானவர் சர்வசிவபண்டிதர். இவர் கட்டிய திரீவிராமீச்வரமுடையார் மகாதேவர் கோவிலுக்கு தானங்கள் வழங்கப்பட்ட விபரமே இச்செப்பேட்டின் நோக்கம்.
வடமொழிப்பகுதி..
செய்யுள் 1 - 6
பவானி அன்னையோடு மணக்கோலம் பூண்ட பரமேஷ்வரன் உங்களுக்கு அருளட்டும்.
எழுத்துக்களின் எண்ணிக்கையோ ஐம்பதுததான். சூரியகுல மண்ணர்களின் குணங்களோ எண்ணிக்கையை கடந்து இருக்கிறது. இந்த எழுத்துக்களைக் கொண்டு அவர்களின் பெருமையை எவ்வாறு கூறுவது. கலைமகளே, இவ்விடயத்தில் எனக்கு அருள் புரிவாயக.
கதிரவனுகு மகனாக மனு. அவனுக்கு இட்சுவாகு. அவனுக்கு முசுகுந்தன். அவனுக்கு மகனாக வளபன்.
அந்தக்குலத்தில் இராசகேசரி என்னும் மன்னன் தோன்றினான். அவனுக்கு மகனாக பரகேசரி பிறந்தான். அவன் எதிரிகளின் தொகுதியாகிய கடலுக்கு அகத்தியரை போன்றவன். இவர்களின் பெயர்களைக் கொண்டே சோழர் குலத்து அரசர்களின் ஆணை பிறப்பிக்கப்பட்டது.
செய்யுள் 7 - 11
அந்த வம்சத்தில் கரிகாலன் தோன்றினான். அவனுடைய ஆணையால் அரசர்கள் காவிரிக்கு கரை எடுத்தனர்.
அந்தப்பெருங்குலத்தில் இணையற்ற தோள்வலிமையுடைய விஜயாலயன் பிறந்தான். அவனுக்குப்பிறகு அவனுடைய மகனான ஆதித்தன் இப்புவியைக் காத்தான். ஆதித்தனுக்கு பராந்தகன் மகனாகப் பிறந்தான். சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் பரமனுக்கு தங்கத்தால் கோவில் செய்தான். அவனிடத்தில் அரிந்தமன் தோன்றினான். அவனுக்கு பராந்தகன் ( சுந்தரச்சோழன்) பிறந்தான்.
செய்யுள் 12 - 15
சுந்தரனுக்கு, திருமாலே அவதரித்தது போல் அருண்மொழிவர்மன் பிறந்தான். அவனுடைய கைகளில் வாழும் ரேகை வடிவில் சங்கும் சக்கரமும் இருந்தன.
அவன் கங்கம், வங்கம், கலிங்கம், மகதம், சிங்களர், ஆந்திரர், இரட்டர்கள் கேரளம், பாண்டியம், முதலிய எல்லா அரசர்களையும் வென்றான். தான் வென்ற செல்வத்தைக் கொண்டு தஞ்சையில் சிவனுக்கு இராசராசேச்சரம் என்னும் கோவில் எடுத்தான்.
அவனுடைய தமயனான கரிகாலன் போரில் பாண்டிய மன்னனை வென்று அவன் தலையை துண்டித்தான். துண்டிக்கப்பட்டத் தலையை தஞ்சை வாயில் மரத்தில் நட்டு வைத்தான்.
இராசராசனுடைய சிறியதந்தையான மதுராந்தகன் கலியின் வலிமையால் சாஸ்திரம் நழுவியதை சரிசெய்ய அவனுருவில் அவதரித்ததாகக் கூறுவர்.
செய்யுள் 16 - 20
இராஜராஜனின் மகன் இராஜேந்திரன். அழகின் மொத்த வடிவம். துணிவு, அறிவு, கருணை இவற்றின் பிறப்பிடம்.
சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மனை வென்றான். கடினமின்றி கங்கையை தன் நாட்டுக்கு கொண்டு சென்றதால் அவன் பகீரதனை வென்றவனாவான்.
தன்னால் நிறுவப்பட்ட கங்கை கொண்ட சோழபுரத்தில் சிவனுக்குக் கோயில் எடுத்தான்.
மதுராந்தகனுக்கு குருவாக, ஆகமங்களில் கரைகண்ட சிவபெருமானுக்குச் சமமான சர்வசிவாச்சார்யார் என்னும் பெயருடையவர் இருந்தார். அறிஞர்களின் நிதி போன்றவர் அவர்.
செய்யுள் 21 - 35.
ஜெயங்கொண்ட சோழமண்டலத்தில் இராசராசசதுர்வேதி மங்கலம் என்னும் பெயருடைய கிராமம் உள்ளது.
இராஜேந்திரனின் குருவான அவர் எய்தார் என்னும் ஊரில் இராமேச்வரம் என்னும் பெயரில் சிவனுக்கு ஒரு கோவில் எடுத்தார். பவானியின் கணவனான பரமேச்வரன் கைலாயத்தை மறந்து இக்கோவிலில் வசித்தார்.
இராஜராஜனின் மகனான மதுராந்தகன் காஞ்சியில் வீற்றிருந்தான் . தனது இருபத்துநான்காவது ஆட்சியாண்டில் இராமேச்வரத்தில் குடிகொண்ட தேவருக்கு பூஜைக்காக நிலங்களை வழங்கினான். பிடிசூழ்தல் முதலான பணிகளைத் துவங்க ஆணையிட்டான். பனையூர் நாட்டில் நன்னாடு மற்றும் மேல்பாக்கம் என்ற பெயரையுடைய இரு கிராமங்களை இணைத்து விக்ரமச்சோழநல்லூர் எனப்பெயரிட்டு மகிழ்வோடு சிவனுக்கு அளித்தான் விக்ரமச்சோழதேவனான இராஜேந்திரன்.
அவனுடைய இருபத்தைந்தாவது ஆட்சியாண்டு முந்நூற்று எழுபத்தைந்து நாளில் அதிகரண புத்தகத்தில் எழுதினர்.
அவனது குரு இத்தானத்திற்கு விண்ணப்பம் செய்தவராவார். இராமனின் மகனான ஜனநாதன் என்பவர் மத்யஸ்தன் ஆவார்.
சங்கரனின் மகனான நாரயணன் என்னும் கவியால் இந்த சாசனம் செய்யப்பட்டது.
தமிழ்ப்பகுதியில்....
கோனேரின்மை கொண்டான் 25 ம் ஆட்சியாண்டில் பத்தாம் நாள்.. காஞ்சிபுர வீட்டில் இருந்து ஆணை பிறப்பித்தான்.
பிடிசூழ்தல் வேலை நடைபெற்ற விபரங்கள் உள்ளன.
பனையூர் நாட்டு இராசராசசதுர்வேதிமங்கலம்.. அந்நாட்டு வேறளந்த நன்னாடு ஏர்பாக்கமும் இணைந்து விக்ரமச்சோழ நல்லூர் எனப்பெயரிடப்பட்டது.
இவ்வூர் எய்தார் என்னும் கிராமத்தில் இராஜேந்திரனின் குரு சர்வசிவபண்டிதரால் எழுப்பப்பட்ட ஸ்ரீராமீச்வரமுடையார்க்கு தேவதான இறையிலியாக வழங்கப்பட்டது.
நிலத்தின் மொத்த அளவு, நீக்கப்பட்ட நிலத்தின் அளவு கழித்து மீதம் உள்ள நிலங்களின் வருவாய் கோவிலுக்கு வழங்கப்பட்டது.
ஒப்பு நோக்கிய அரசு அதிகாரிகள்..
1. கங்கை கொண்ட சோழபுர இராசவிச்சாதிர பெருந்தெருவில் வசிக்கும் சோனகன் சாவூர் பரஞ்சோதி.
2. கோவனாச்சனான கங்கை கொண்ட சோழ அணிமுரி நாடாழ்வான்.
3. நராக்கன் மாராயன் அருமொழியான் உத்தமச்சோழ பிரம்மராயன்.
4. நாரயணன் எடுத்தபாதமான உத்தமச்சோழக்கோன்.
வரியிடுதல், கணக்குப்புத்தகத்தில் குறித்தல், ஸ்ரீமுக ஆணைப்படி பிடிசூழ்ந்து எல்லைகள் வகுக்கப்பட்டு தானமாக பெறப்பட்ட பகுதி நிர்ணயம் செய்யப்பட்டது.
இச்செப்பேட்டின் மூலம் நமக்கு கிடைக்கும் சில அவசியத் தகவல்கள்.
தஞ்சைப் பெரியகோவிலை இராஜராஜன் எடுத்தது கல்வெட்டுகளால் அறியப்பட்டாலும், அச் செய்தி இச்செப்பேட்டிலும் காணப்படுகிறது.
கங்கை கொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் ஆலயத்தை இராஜேந்தின் எடுத்த செய்தி இச் செப்பேட்டில் மட்டும் காணப்படுகிறது. வேறு எந்த கல்வெட்டிலோ, செப்பேட்டிலோ இத்தகவல் இல்லை.
இராஜேந்திரனின் குருவாக சர்வசிவபண்டிதர் வடமொழிப் பகுதியில் ஐந்து சுலோகங்களில் இடம்பெறுகிறார். தமிழ்ப்பகுதியில் இவர்
" உடையார் சர்வசிவபண்டிதர் " என்று அழைக்கப்படுகிறார்..
தஞ்சை பெரியகோவிலில் உள்ள இராஜேந்திரனின் கல்வெட்டிலும் இவர்
" உடையார் சர்வசிவபண்டித சைவாச்சார்யார் " என்றே அழைக்கப்படுகிறார்..
ஆகமங்களில் கரைகண்டவர் இவர் என்று செப்பேட்டில் குறிக்கப்பட்டாலும் இவர் ஆலயத்தில் பூஜை செய்யும் சைவாச்சார்யார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது உருவம் படிமமாக எசாலம் கோவிலில் உள்ளது.
இந்த சாசனத்தை ஒப்பு நோக்கும் அரசு அதிகாரியாக இருந்தவர்களில் ஒருவர்
சோனகன் சாவூர் பரஞ்சோதி. பெரியகோவில் கல்வெட்டில் நாயகம் செய்யும் அதிகாரியாக இருந்தவர், இராஜேந்திரன் காலத்திலும் உயர் அதிகாரியாக இருந்துள்ளார். இவர் ஒரு இஸ்லாமியர் என்பது பெரும்பாலான அறிஞர்கள் முடிவு.
தொடர்வோம்...
எழுத்து ; மா.மாரிராஜன்
Refrence ..
சோழர் செப்பேடுகள்.
க. சங்கரநாரயணன்.
தமிழிணையம் தகவலாற்றுப்படை இணையப்பக்கம்..
புகைப்படம்..
வரலறு.Com.