Sunday, May 3, 2020

சோழர் செப்பேடுகள் -7



சோழர் செப்பேடுகள் -7

பெரிய லெய்டன் செப்பேடு..
இராஜராஜனின் 21 ம் ஆட்சியாண்டு..
கி.பி. 1005.

ஹாலந்து நாட்டில் உள்ள லெய்டன் பல்கலைக் கழகத்தில் உள்ள லெய்டன் அருங்காட்சியகத்தில் இச்செப்பேட்டுத் தொகுதிகள் உள்ளது.
இச்செப்பேட்டு விபரங்களை Epigraphy indica vol 22 இல் Page 213 - 266 வரை பதிப்பிக்கப்பட்டு 1933 ம் ஆண்டு வெளிவந்தது. பதிப்பித்தவர் K.v. சுப்பிரமணி ஐய்யர். இச்செப்பேட்டு எவ்வாறு .? யாரிடமிருந்து.? கிடைத்தது என்ற விபரங்கள் கிடைக்கவில்லை..
நாகப்பட்டினத்திலிருக்கும் சூடாமணி பௌத்த விஹாரத்திற்கு ஆனைமங்கலம் என்னும் ஊரை தானமாகக் கொடுத்ததால் இச்செப்பேடு ஆனைமங்கலச்
செப்பேடு என்றும் அழைக்கப்படும்.

 


இராஜராஜனின் 21 ஆம் ஆட்சியாண்டில் இந்தக் கொடை வழங்கப்பட்டது. இராஜராஜன் மறைவிற்குப் பிறகு அவரது மகன் இராஜேந்திரன் காலத்தில் இச்செப்பேடு வெளியிடப்பட்டது.
இந்த செப்பேட்டில் 21 பட்டைகள் உள்ளன.
111 வரிகள் வடமொழியிலும் 332 வரிகள் தமிழ் எழுத்துக்களிலும் உள்ளன.
முகப்பு இலச்சினையில் இரு மீன்கள், புலி, இரு பக்கமும் விளக்குத்தாங்கிகள், இதன் மேல் தீபம், கொடை, இருபுறமும் சாமரம், கிடைமட்டமாய் வில், இவைகள் உள்ளன..



முகப்பு இலச்சினையில் இராஜேதிரசோழனின் சாசனம் உள்ளது.
" ராஜத் ராஜன்ய மகுட ஸ்ரேனி ரத்னேஷூ ஸாஸநம் இதி ராஜேந்திர சோளஸ்ய பரகேசரி வர்ம்மண."
அரசர்களின் முடிகளின் வரிசையில் ரத்னம் போன்று திகழும் இது பரகேசரி வர்மனான இராஜேந்திர சோழனின் சாசனம். "
சத்திரியசிகாமணி வளநாட்டில் பட்டினக்கூற்றத்தில் நாகப்பட்டினம் என்னும் ஊரில் கடாரத்து அரசன் மாரவிசயோதுங்க வர்மனால், அவனது தந்தையின் பெயரில் சூளாமணி விஹாரம் ஒன்று எடுக்கப்பட்டது. அந்த புத்த விஹாரத்துக்கு ஆனைமங்கலம் என்னும் ஊரை பள்ளிச்சந்தமாக இராஜராஜன் வழங்கிய ஆணையே இச்செப்பேட்டு விபரங்களாகும்.
வடமொழிப்பகுதி ..




செய்யுள் 1 - 5

விஷ்ணுவின் தோள்கள் உங்களுக்கு செல்வத்தைப் பெருக்கட்டும். சோழவம்சம் முழு உலகத்தையும் காக்கட்டும். அரசர்களுள் முதல்வனான மனு சூரியனுக்குப்பிறந்தான் பிறகு இட்சுவாகு. பிறகு மாந்தாதா. இவனது மகனாக முசுகுந்தன். அவன் மகனாக வளபன். அந்தக் குலத்தில் புகழ் பெற்ற சிபி தோன்றினான். பிறருக்காக தன் வாழ்க்கையை காத்தவன்.

செய்யுள் 6 -

அந்தக் குலத்தில் சோழன் என்னும் மன்னன் பிறந்தான். அதற்குப்பிறகு தோன்றிய அரசர்கள் அவன் பெயரான சோழனென்னும் பெயரை பூண்டனர்.
செய்யுள் 7 - 8
அதன் பிறகு எல்லா எதிரிகளையும் வென்ற இராசகேசரி பிறந்தான். பிறகு பரகேசரி பிறந்தான். இராசகேசரி மற்றும் பரகேசரி என்னும் இந்த மன்னர்களின் பெயரை மாறி மாறிச் சூடிய மற்ற அரசர்களின் ஆணை பிறப்பிக்கப்பட்டது.




 செய்யுள் 13 - 17.

சோழர்குலத்தில் எல்லா அரசர்களையும் வெல்லும் திறன்பெற்ற விஜயாலயன் பிறந்தான். அவனுக்கு மகனாக அளவிடமுடியாத ஒளிபொருந்திய ஆதித்தன் பிறந்தான். அந்த ஆதித்தனிடமிருந்து பராந்தகன் என்னும் அரசன் பிறந்தான். சூரியகுத்தின் கொடியை போன்ற அந்த அரசன் சிதம்பரத்தில் பிறை சூடிய பெருமாள் கோவிலுக்கு பொன் வேய்ந்தான்.


செய்யுள் 18 - 20

பராந்தகனுக்கு முத்தீயைப் போன்ற மூன்று புதல்வர் பிறந்தனர். இராசாதித்தன். கண்டராதித்தன். அரிஞ்சயன். பராந்தகன் சுவர்க்கத்தை அடைந்தப்பிறகு இராசாதித்தன் தலைவனான். கிருஷ்ணராஜனோடு நடந்தப் போரில் அவனை படையோடு சேர்ந்து கலங்கடித்தான்.
கூறான அம்புகளால் நெஞ்சு பிளக்கப்பட்டு யானையின் மீது அமர்ந்தவாறே சொர்க்கம் சென்றான்.
 
செய்யுள் 21 - 23

அதன்பிறகு இராசாதித்தனின் தம்பியும் பெரும் புகழ் பெற்றவனுமான கண்டராதித்தன் அரசன் ஆனான். அவன் மதுராந்தகன் என்னும் பெயரையுடைய மகனை பெற்றான். காவிரியின் வடகரை பூமீயில் தன் பெயரால் ஒரு கிராமத்தை உருவாக்கினான். அவன் சுவர்க்கம் சென்ற பிறகு எதிரி என்னும் காட்டுக்கு காட்டுத்தீ போன்ற அரிஞ்சயன் ஆண்டான்.

செய்யுள் 24 - 25.

அந்த அரிஞ்சயனுக்கு பராந்தகன் ( சுந்தரச்சோழன்) பிறதான். சேவூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் தன் கூரிய அம்புகளின் தொகுதியால் திசைகளை நிரப்பினான்.

செய்யுள் 26 - 30

அவன் கரிகாலன் என்னும் மறுபெயருடைய ஆதித்தனையும், சூரியகுலத்திற்கு சிரோமணி போன்ற இராசராசனையும் பெற்றான். அந்த பராந்தகன் இறந்த பிறகு ஆதித்தன் ஆண்டான். அவன் போரில் வீரபாண்டியனோடு இலீலையாய் விளையாடினான். அந்தப்போர் கர்வபட்ட யானையோடு சிங்கக்குட்டி மோதுவது போல் இருந்தது. ஆதித்தனுக்குப் பிறகு கண்டராதித்தனின் மகனும் பெரும் தோள் வலிமையுடைய மதுராந்தகன் ஆண்டான். இவன் இந்திரனைப்போல் புகழையுடையவன். அந்த மதுராந்தகன் வானுலகம் சென்றபிறகு, சோழர் குலத்தின் விளக்கைப்போன்ற இராசராசன் அரியணை ஏறினான்.

செய்யுள் 31 - 34

இராசராசன்.. பாண்டிய , துளு, கேரளா, சிங்கள அரசர்களையும், சத்யாச்சரன் முதலான அரசர்களையும் வென்றான். எல்லா அரசர்களும் தங்களைக் காத்துக்கொள்ள நித்யவிநோதனான இராசராசனின் திருவடிகளில் அடைக்கலமானார்கள். இராசராசனை அவர்கள் இராசாச்சரயன் என்று போற்றினார்கள்.
 
செய்யுள் 35.

ஒளிபெற்ற பாதபீடத்தை உடைய இராசகேசரிவர்மரான இராஜராஜனின் 21 ம் ஆட்சியாண்டு. சத்ரியசிகாமணி வளநாடு, பட்டினக்கூற்றம் நாகப்பட்டிணத்தில்.....
ஸ்ரீவிஜயநாட்டின் தலைவனும் கடாகத்தின் அதிபதியும் சைலேந்திர வம்சத்தில் பிறந்தவனும் சூளாமணி வர்மனின் மகனான மாராவிஜயோதுங்க வர்மனால் , தனது தந்தையின் பெயரால் எடுக்கப்பட்ட உயர்ந்த பெருமையுடைய மிக அழகானதுமான சூளாமணி விஹாரத்தில் வீற்றிருக்கும் புத்தபகவானுக்கு ஆனைமங்கலம் என்னும் கிராமத்தைக் தானமாக இராஜராஜன் கொடுத்தான்.

செய்யுள் 35 - 40.

இந்த சக்க்கரவர்த்தி தெய்வத்தன்மை அடைந்தபிறகு, இவனது மகனான மதுராந்தகன் ( இராஜேந்திரன்) இந்த சாசனத்தை செய்தான்.
இந்த விஹாரம் வைபத்தோடு இவ்வுலகில் விளங்கட்டும்.கடார அதிபதி தனக்கு பிறகு வரும் மன்னர்களை இந்த அறத்தை காக்குமாறு வேண்டுகிறான். அனந்தநாரயணன் என்பவன் இந்த பிரசஸ்தியை யாத்தான்.

செய்யுள் 41 - 48

அரசனின் பெருந்தன அதிகாரியான தில்லயாளியின் ஆணைப்படி எழுதப்பட்டது. கிருஷ்ணன் என்பவனுடைய இரு புதல்வர்களான ஸ்ரீரங்கன், தாமோதரன்,
வாசுதேவனின் மகனான கிருஷ்ணனும், ஆராவமுதனின் மகனான புருஷோத்தமன். இவர்கள் ஐவரும் இந்த பிரசத்தியை செதுக்கினர்..
தமிம்ப் பகுதியின் சுருக்கம்..

கோனேரிமை கொண்டான் 21 ஆம் ஆட்சியாண்டில், தஞ்சாவூர் புறம்படியில் இராசாச்ரய மாளிகையின் தெற்குப்பக்கம் உள்ள மண்டபத்தில் வீற்றிருக்கும் போது, கடார அரசனான சூளமணிபன்பன் சத்திரியசிகாமணி வளநாடு பட்டணக்கூற்றம் நாகபட்டினத்தில் எடுத்த சூளாமணி பன்ம விஹாரபள்ளிக்கு 97 வேலி நிலப்பரப்புடைய ஆனைமங்கலம் என்னும் ஊரை பள்ளிச்சந்தமாக வழங்க ஆணை வெளியிடப்பட்டது.

விபரங்களை ஓலையில் எழுதியவர் அமுதன் தீர்த்தங்கரன். ஓலை எழுதுபவர்களின் தலைவர் ஓலை நாயகமாக இருந்தவர் கிருஷ்ணன் ராமனான மும்முடிச்சோழ பிரம்மராயன்.
மேலும் பல அதிகாரிகள் ஆய்வு செய்து, அரசனின் ஆணை ஸ்ரீமுகமாக பட்டினக்கூற்றத்திற்கு சென்றது. சபையோர் அரசனின் ஸ்ரீமுகத்தை தலையில் தாங்கி, பிடிசூல் எல்லைகள் வகுக்கும் பணி தொடங்கியது.
இச்செப்பேட்டில் கிடைக்கும் சில அவசியத்தரவுகள்..
பராந்தகச் சோழன் தில்லை சிற்றம்பலத்திற்கு பொன்வேய்ந்த செய்தி.
பராந்தகனின் பிள்ளைகளாக இராசாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன், என்ற மூவர்தான் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஏனோ .. உத்தமசீலியை பற்றிய குறிப்பு இல்லை.
பராந்தகன் இறந்தபிறகு இராசாதித்தன் ஆண்டான் என்னும் செய்தியும் சற்று ஆய்வுக்குரியது.

அதேபோல் சுந்தரச்சோழன் இறந்த பிறகு அவனது மூத்த மகன் ஆதித்த கரிகாலன் பதவியேற்றான் என்ற செய்தியும் சற்று வியப்புக்குரியது.
இச்செப்பேட்டின் மிக முக்கிய மைய நோக்கம்..
நாகப்பட்டினதில் உள்ள கடாரத்து அரசனால் எடுக்கப்பட்ட பௌத்த விஹாரமான சூடாமணி விஹாரதிற்கு இராஜராஜன் கொடை அளித்த நிகழ்வு..

செப்பேட்டில் இடம் பெறும் ஸ்ரீவிஜயமன்னனால் எழுப்பப்பட்ட
சூடாமணி விஹாரம்
18 ம் நூற்றாண்டு பிற்பகுதி வரை நாகப்பட்டினத்தில் இருந்தது.
1660 இல் டச்சுப்பயணி Woulter schouten என்பவர் நாகைக்கு விஜயம் செய்து இந்த புத்த விஹாரத்தை சீன பகோட என்று குறிப்பு எழுதினார்.
1724 ல் டச்சுப் பாதிரியார் பிரான்சிஸ் வேலன்டைன் ( Francois valentyn) என்பவர் இந்த விஹாரம் பற்றி குறிப்பு எழுதுகிறார்.
1846 இல்
சர் W. எலியட் என்னும் ஆங்கில அறிஞர் தான் எழுதிய பயணக்குறிப்பில் இவ்விஹாரம் பற்றி குறிப்பிடுகிறார். இந்த பௌத்த விஹாரம் நான்கு பக்க கோபுரங்களுடன் மூன்று நிலை கட்டிடமாக இருந்தது. சிமெண்ட் இல்லாமல் செங்கல்லால் எடுக்கப்பட்டது.

" Four sided tower of three stories constructed bricks closely fitted together with out cement. "
என்று எலியட் குறிப்பிடுகிறார்.
புதுச்சேரியிலிருந்து நாகைக்கு வந்த பிரஞ்சு பாதிரியார்களின் தூண்டுதலால் .. அப்போதைய ஆங்கில அரசு 1867 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ம் நாள் சூடாமணி விஹாரத்தை இடித்தது.
இப்பகுதியில் நடந்த அகழ்வாய்வில் பல புத்தர் சிலைகள் கிடைத்தன.
தற்போது நாகையில் இருக்கும் நீதிமன்ற வளாகத்தில் சூடாமணி விஹாரம் இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
தொடர்வோம்..



எழுத்து ; மா.மாரிராஜன்.

Reference
சோழர் செப்பேடுகள்.
க. சங்கரநாரயணன்.

Epigraphy indica vol 22.
புகைப்படம்.
இணையப் பக்கங்கள்..

No comments:

Post a Comment