Wednesday, June 13, 2018

தஞ்சை சோழர் அரண்மனை...ஓர் ஆய்வு !


தஞ்சை சோழர் அரண்மனை....

சிந்திக்க வைக்கும் கேள்விகள்!!!(ஓர் ஆய்வு)

எழுதியவர் : திரு.செல்வராஜ்

தஞ்சையில் சோழர் அரண்மனை பற்றிய ஓர் ஆய்வு.(கீழேயுள்ள புகைப்படம் இச்செய்திகளை உள்ளடக்க ஓர் சிறிய முயற்சி)



தஞ்சையில் சோழ மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை இருந்தது எங்கே என்ற கேள்விக்கு விடை ,யூகமாகத்தான் ஆய்வாளர்கள் சொல்லி வருகிறார்கள். அது பற்றிய என்னுடைய ஆய்வுக் கட்டுரை , தஞ்சையில் நடைபெற்ற ,8வது உலகத் தமிழ் மாநாடு துவக்க விழா அன்று தமிழ் தினசரிகளின் சிறப்பு மலரில் வெளி வந்தது. அதன் சுருக்கம் சோழ வரலாற்றின் ஆர்வலர்களுக்காக இங்கே பதிவிடுகிறேன்.:

விஜயாலய சோழனுக்கு முன் தஞ்சையை ஆண்டவர்கள் முத்தரைய மன்னர்கள்,,,,, பல்லவர்கள் என்ற ஒரு கருத்தும் உண்டு.சோழர்களுக்கு முன் ஆண்டவர்கள் ,கோட்டை கொத்தளங்கள்,அகழி சூழ்ந்த அரண்மனையில்தான் வாழ்ந்திருக்கவேண்டும்., தஞ்சையைக் கைப்பற்றிய விஜயாலய சோழன் அதே அரண்மனையில்தான் ஆட்சியைத் தொடங்கியிருக்க வேண்டும். இவருக்குப்பின் வந்த சோழ மன்னர்களும் இதே அரண்மனையில்தான் வாழ்ந்து இருக்கிறார்கள் .மாமன்னன் ராஜராஜ சோழர் இந்த அரண்மனையில் இருந்து தான் தன் படையெடுப்புகளைத் தொடங்கியிருக்கிறார்; தஞ்சையில் மாபெரும் கோயிலையும் எடுப்பித்து இருக்கிறார். வரலாற்றைக் கொஞ்சம் நுணுகி ஆராய்ந்தால் ராஜேந்திர சோழனுக்குப் பின் வந்தவர்கள் கூட தஞ்சையில் இருந்துதான் ஆட்சி செய்து இருக்க வேண்டும். என்பது புலனாகும்.

சரி, அரண்மனையைத் தேடுவோம்....

தஞ்சையில் இரு அரண்மனைகள், ஒன்று உள்ளாழை.,இன்னொன்று புறம்படி மாளிகை, புறம்படி மாளிகை இருந்த இடம் இன்றைய கருந்திட்டைக்குடி பகுதிதான்,இதில் ஒன்றும் வேறுபட்ட கருத்து இல்லை. அரச குடும்பத்தினர் வாழ்ந்த உள்ளாழை மாளிகை இருந்தது எங்கே ? இதற்குத்தான் நாம் விடை காண வேண்டும்.

இன்றைய தஞ்சை அரண்மனையின் நான்கு திசைகளிலும் தேடுவோமா ?

கிழக்கு திசை எல்லையில்தான் விஜயாலயன் நிசும்ப சூதனிக்கு கோயில் எடுப்பித்தார்,இதற்கும் கிழக்கில் தேடுவது வீண் வேலை., என்னெனில் வயல்வெளி.இப்பொழுது உள்ள கோட்டைக்கும் இந்தக் கோயிலுக்கும் இடையில் ஒரு பழைய கோட்டை அகழி இருந்த தடயம் கூட கிடைக்கவில்லை.,,,,,கோட்டைக்குத் தென் திசை, சுக்காம்பாறை, (Laterite soil ). இங்கே மாபெரும் கோட்டையும் அகழியும் புதையுன்டு போய் இருக்கவே முடியாது. வடக்கில்தான் புறம்படி மாளிகை, வடவாறு. என்வே இந்தப் பகுதியில் இருக்க வாய்ப்பில்லை., இதுகாறும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. இனி மேற்கு பகுதியில்தான் தேடவேண்டும்,தேடினேன், இன்றைய சீனிவாசபுரம் ,செக்கடி, மேலவெளி,சிங்கபெருமாள் குளம் .,பகுதிகளில் மேல் பகுதியிலேயே ஏராளமான சோழர் காலக் கூரைஓடுகள், பானை ஓடுகள் செங்கற்கள் நாலா புறமும் சிதறிக் கிடந்தன-40 ஆண்டுகளுக்கு முன்- இன்று இப்பகுதிகள் எல்லாம் குடியிருப்புகள்,இங்குதான், பெரிய கோயில் நாட்டிய மகளிர் ,407 தளிச்சேரி பெண்களுக்கான குடியிருப்புகள்; இவர்களுக்கு உதவிட 200க்கும் மேற்பட்ட பல்துறைக் கலைஞர்கள் வீடுகள் இருந்தன.அவற்றின் எச்சங்கள்தான் அவை. இந்த ஓடுகளைத் தவிர கோட்டை அகழி அரண்மனைத் தடயங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்பட வில்லை. அவ்வளவையும் இந்த மண் விழுங்கியது என்பதும் நம்ப முடியாத கட்டுக் கதைதான். மேலும் அரண்மனைக் கோட்டைகள் கட்டக்கூடிய அளவிற்கு இந்த மண்ணின் அமைப்பு கிடையாது.மிகவும் தாழ்வான பகுதி.அதனால்தான் இங்கே சிங்கபெருமாள் குளம் உள்ளது, கட்டடக் கலை வல்லுனர்களான சோழர்கள் அரண்மனையை இந்தப் பகுதியில் எழப்ப வேண்டும் என்று எண்ணிக் கூட இருக்க மாட்டார்கள்.

இவற்றை எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தால், சோழர்கள் அரண்மனை இன்றைய தஞ்சைக் கோட்டை அரண்மனையின் நான்கு திசைகளிலுமே இருந்து இருக்க வாய்ப்பு இல்லை. அப்படி என்றால் ,எங்கேதான் இருந்தது ?

நம்முன் இருக்கும் ஒரே வாய்ப்பு இந்த நான்கு திசைகளின் மைய புள்ளியான இன்றைய தஞ்சை அரண்மனை ,கோட்டைதான் ,சோழர்களின் அரண்மனை இருந்த இடமாதல் வேண்டும்.இவற்றை நாயக்கர்கள் கட்டினார்கள் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத விவாதம்.ஏனெனில் தஞ்சை வந்த நாயக்கர்கள் ,10 கி.மீ சுற்றளவுள்ள இரண்டு அடுக்கு கோட்டை, 200 அடி ஆழமுள்ள அகழி,,கோட்டைக்கும் அகழிக்கும் நீர்வழிப் பாதைகள் இவற்றைஎல்லாம் கட்டும் பணியை செய்து இருக்க முடியுமா ? அதற்காகவும் அவர்கள் இங்கே வரவில்லை. அவர்கள் வந்த பொழுது அகழிக் கோட்டை சிதிலமடைந்து இருந்ததை சீர்படுத்தியிருக்க வேண்டும், சோழர்கள் அரண்மனை மதுரை சுந்தரபாண்டியனால் தீயிட்டு எரித்து தரை மட்டமாக்கப்பட்டதால் , இந்த அழிவுகளின் மேல்தான் நாயக்கர்கள் அரண்மனை கட்டியிருப்பர்ர்கள். இன்றுள்ள அரண்மனை வளாக மேடுகளே இதற்கு சான்று.. மேலும் தஞ்சைக் கோட்டைத் தெருக்கள் வீதிகள் திட்ட்மிட்டு அமைக்கப்படாமல், வீடுகள் உயர்வு தாழ்வுகளுடன் ஏராளமான சந்துகளுடன் ஒழுங்கற்று இருப்பதற்குக் காரணம் , சோழர்களின் அரண்மனை மற்றும் குடியிருப்பு அழிவுகளின் மேல் இவை கட்டப்பட்டதே ஆகும்.

இவற்றை எல்லாம் ஒப்பிட்டு, தர்க்க ரீதியாக சிந்தித்து ஆய்வு செய்தோமானால், இன்றைய தஞ்சைக் கோட்டை, அகழி சூழ்ந்த அரண்மனை உள்ள பகுதியே மாமன்னன் ராஜராஜ சோழனும் அவரது முன்னோர்களும் பின்னோர்களும் வாழ்ந்து மறைந்த , மண்ணில் மறைந்த மாபெரும் அரண்மனை இருந்த இடமாதல் வேண்டும்.

தஞ்சை
அரண்மனையில் உள்ள திடல்களை, அகழ்வாய்வு செய்தால்தான் சோழர் அரண்மனை பற்றிய முழுத் தகவல்களும் வெளி வரும்.
செய்வார்களா ?...