Wednesday, April 22, 2020

சோழர் செப்பேடுகள் 1




சோழர் செப்பேடு -1

வரலற்றுத்தரவுகளை நமக்குத் தரும் ஆவணங்களில் கல்வெட்டுகளைப் போல செப்பேடுகளும் மிக முக்கியமானதாகும்.
ஒரு சில அவசியத் தகவல்களை செப்பேடுகள் மட்டுமே நமக்குத் தருகிறது.
வழக்கம் போல் ஒரு அரசனின் நில தானங்கள், கொடைகள்,சலுகைகள்... இதைக்குறித்த அரசனின் ஆணைகளை செம்புத் தகடுகளில் பொறிக்கப்பட்டு அவைகள் ஆவணங்களாக அறிவிக்கப்படும். இந்த செம்பு பட்டயங்களே செப்பேடுகள் எனப்படும்.



இந்த செப்பேடுகளில் தானம் குறித்த செய்தி பிரதானமாக அமைந்தாலும், மேலும் பலத் தகவல்களும் பதிவுசெய்யப்படுகிறது.
அரசனின் விபரம், அவனின் முன்னோர், அவனது வாரிசு விபரம், அவனது வெற்றி, இன்னும் பல விபரங்கள் அச் செப்பேட்டில் காணப்படுகிறது. இவ்விபரங்கள் மிகச்சிறந்த வரலாற்றுத் தரவுகளாக உள்ளன..


அரசன் வழங்கும் கொடையானது முடிவு செய்யப்பட்டு, அதன் விபரங்கள் ஒரு ஓலையில் எழுதப்படும். ஓலையில் எழுதப்பட்ட விபரங்களை அரசு உயர் அதிகாரிகள் சரிபார்ப்பார்கள். அதன் பிறகு ஓலையில் உள்ள விபரங்கள் செப்பேடுகளில் பொறிக்கப்படும்.

செம்பு கட்டிகளை உருக்கி அடித்து பட்டைகளாக செய்வார்கள். அதன் இலகுவான பரப்பின் மேல் விபரங்களை ஒரு பண்டிதர் எழுத்தால் எழுதுவார். அதன் பிறகு பட்டயங்கள் நன்கு காய்ந்த பிறகு எழுத்தின் மேல் உளி கொண்டு செதுக்கி செப்பேடுகள் முழுமையடையும். ஒவ்வொறு பட்டையத்திலும் எண்கள் இடப்படும்.

பட்டைகளின் ஓரத்திலோ, நடுவிலோ துளைகள் இடப்படும்.
இவ்வாறு எழுதப்பட்ட செப்பு பட்டயங்கள் ஒரு வளையத்தில் கோர்க்கப்படும். வளையத்தின் முகப்பில் அரசனது முத்திரையும் செம்பில் செதுக்கி இணைப்பார்கள்.



சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், மற்றும் பல சிற்றரசர்கள் ஏராளமான செப்பேடுகளை வெளியிட்டுள்ளனர்..
இவற்றில் சோழர் காலத்திய செப்பேடுகளில் காணப்படும் விபரங்களை அடுத்தடுத்த தொடர் பதிவுகளாக அறிய இருக்கிறோம்.
இதுவரை சோழர் காலத்திய செப்பேடுகளாக நமக்கு கிடைத்திருப்பவை..

1. உதயேந்திரம் செப்பேடு..
( முதல் பராந்தகச் சோழனால் வெளியிடப்பட்டது
கி.பி. 922)

2 வேலஞ்சேரிச் செப்பேடு.
( முதல் பராந்தகச் சோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. 932)

3 அன்பில் செப்பேடு. (சுந்தரச் சோழனால் வெளியிடப்பட்டது
கி.பி 961.)

4 . திருச்செங்கோடு செப்பேடு. -
( இராசகேசரி. வெளியிடப்பட்டது.
கி.பி.961)

5 . திருச்செங்கோடு செப்பேடு - 2
6. சென்னை அருங்காட்சியகச் செப்பேடு.
( உத்தமச் சோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. 986)

7. பெரிய லெய்டன் செப்பேடு.
(இராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. கி.பி. 1005)

8. திருவாலங்காட்டுச் செப்பேடு.
(இராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. 1018)

9. கரந்தைச் செப்பேடு.
(இராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. 1020)

10. திருக்களர்ச் செப்பேடுகள்
(இராஜேந்திர சோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. 1030)

11. எசாலம் செப்பேடு.
( முதலாம் இராஜேந்திரன்.
கி.பி. 1037)

12 . திருக்களர் செப்பேடு. 2
(முதலாம் இராசாதிராசன்)

13. சாராலச் செப்பேடு.
( வீரராஜேந்திரன்.
கி.பி. 1069)

14.சிறிய லெய்டன் செப்பேடு.
( முதலாம் குலோத்துங்கசோழனால் வெளியிடப்பட்டது.
கி.பி. 1090)

15. திருக்களர்ச் செப்பேடு. - 3
( முதலாம் குலோத்துங்கன்.
கி.பி.1098 )

16. திருக்களர்ச் செப்பேடுகள் - 4 (இரண்டாம் இராஜராஜன்.
கி.பி. 1164)

17. திருக்களர்ச் செப்பேடு. - 5
மூன்றாம் குலோத்துங்கன்.
கி.பி. 1207)

18. திருவிந்தளூர் செப்பேடு..
( இரண்டாம் இராஜேந்திரன்)
மேற்கண்ட செப்பேடுகள் ஒவ்வொன்றின் விபரத்தை சுருக்கமாக அடுத்தடுத்தப்பதிவில் தொடர்வோம்..
நாளை ...

பராந்தகச்சோழனின் உதயேந்திரம் செப்பேடு விபரங்கள்..
தொடர்வோம்.


எழுத்து  : மா.மாரிராஜன்..

Reference ..
சோழர் செப்பேடுகள்.
க. சங்கரநாரயணன்.

தமிழிணியம் தகவலாற்றுப்படை இணையப்பக்கம்.



















No comments:

Post a Comment