உத்தமசீலி சதுர்வேதி மங்கலம்
தடங்களைத் தேடும் தடங்கள்
தடங்களைத் தேடும் தடங்கள்
தடம் 1 பயணம் 2
(எழுத்து/படங்கள் : திருச்சி பார்த்தி)
கடந்தமுறை நாங்கள் பகிர்ந்த சில அனுபவங்களின் தொடர்ச்சி இந்தப் பகுதி. வாருங்கள் பயணிப்போம் 🚶🚶🚶
'சிதிலமடைந்த (அ) உருமாற்றபட்ட இந்த இரு கோவிலைக் காணவா, 25 கி.மீ பயணித்து வந்தோம்'
என்ற சிறு அயர்ச்சி மனதில் நிழலாடியது! ஆயினும் உள்மனது 'இங்கே ஏதோ ஒன்று இருக்கும், நிச்சயம்' என்று நினைத்த அந்நினைப்பு ஒருபுறம் இருந்தது, அர்ச்சகர் கூறியது வேறு, நினைவில் வந்தது!
பசி வேறு வயிற்றைப் பிசைந்தது, சரி முதலில் சாப்பிடுவோம் என்று, அருகேயுள்ள கம்மங்கூழ் கடையில், சிறிது பசியாறிவிட்டு, கடைக்காரரிடம் சிறிது பேச்சுக் கொடுத்தோம், 'அருகே பழைய சிவாலயம் ஏதும் உள்ளதா ஆங்ஙான்?' என்று. அவர், 'வடக்கே சிறிது கொள்ளிடக் கரையோரம் 4 கிமீ போனா ஒரு கோவில் இருக்கு, நல்ல பெரிய கோவில். சீக்கிரம் போங்க! நடை சாத்திடுவாங்க' என்று அவசரப்படுத்தினார்,
'ஆஹா, மகிழ்ச்சி ஆங்ஙான்' என்று அவருக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டுக் கிளம்பினோம். சரியான கிராமத்துப் பாதை, வழிநெடுக மண்தான், தார், மருந்திற்கும் கூட கண்ணில் படவில்லை. எங்குகாணினும், சிறுசிறு முட்கள், சிறிய அரளைக்கல் வேறு, வாகனம் பஞ்சர் ஆனால் அவ்வளவு தான், அருகே போய் ஆளைக் கூட்டிவருவதற்குள் தாவுதீர்ந்துவிடும்! மெல்லமாய் புதுமாப்பிள்ளை ஊர்வலம் போல் சென்றோம், பின் ஒருவாறு கோவிலைக் கண்டோம்!
கோவிலின் பிரம்மாண்டத்திற்கு முன் இதெல்லாம் ஒரு விஷயமல்ல என்று மண்டையில் உரைத்தது!
நாங்கள் சென்றது வெள்ளிக்கிழமையாதல், கோவிலில்சிறிது கூட்டம் இருந்தது! மணி சரியாக 12.30 ஆனது! நடை சாத்தும் நேரம் விறுவிறுவென குழாயடியில் கைகால்களை சுத்தம் செய்து மூலவரை தரிசிக்கச் சென்றோம்.
கோவிலின் சில விவரங்கள் கீழே:
திருவானைக்காவலிலிருந்து கல்லணை செல்லும் வழியில் கொள்ளிடக்கரையில் அமைந்துள்ள இந்த .
ஊர், திருப்பாற்றுறை (எ) திருப்பாலத்துறை என்ற பெயர் கொண்டது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 59வது தலம் ஆகும்.
மூலவர்: ஆதிமூலேஸ்வரர் (திருமூலநாதர்)
உற்சவர்: சோமாஸ்கந்தர்
தாயார்: நித்யகல்யாணி
தல விருட்சம்: வில்வம்
நடையடைக்க நேரமானதால் அர்ச்சகர் வெளியேற அவசரப்படுத்தினார்.
சரி கோவிலைச் சுற்றி வரலாம் என்று சென்றால்.....
ஆஹா,! வியந்தோம் என்றால் அது மிகையல்ல, முழுக்க முழுக்க கல்வெட்டுகள், அழகிய சிற்பங்கள்!
இன்றைய பயணமே இதைக் காணத்தானோ என்பது போல்அமைந்தது!
அர்ச்சகர் நச்சரிப்பு வேறு! பின் அவரிடம்சென்று நம் குழுவின் நோக்கத்தையும், நாங்கள் கடந்துவந்த சிரமத்தையும் கூறி ஒருவாறு அரைமணிநேரம் அனுமதி பெற்றோம்!
கல்வெட்டுச் சிறப்புக்களை சிறிது காண்போம்:
1.பராந்தகரின் 13,20 ஆட்சியாண்டு கல்வெட்டுகள்
2.கண்டராதித்தர் கல்வெட்டு
3.உத்தமசோழரின் 3,5,8,15 ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்
4.ராஜராஜரின்12,14 ம் ஆட்சியான்டு கல்வெட்டுகள்
5.ராஜேந்திரரின் 3,5 ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்
6.முதலாம் குலோத்துங்கனின் 12ம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள்
7.விக்ரம சோழன் கல்வெட்டு
8.சுந்தரபாண்டியனின் 9 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு
9.குலசேகர பாண்டியனின் 12 ம் ஆட்சியாண்டு கல்வெட்டு
ஆகியன கிடைக்கின்றன
.
கல்வெட்டில் இவ்வூர் இறைவன் உறையூர் கூற்றத்து, தென்கரை பிரம்மதேயம், உத்தமசீலி சதுர்வேதி மங்கலத்து திருப்பாற்றுறை மஹாதேவர் என குறிக்கப்படுகிறார்.
அரசகுடும்பத்தினர் இங்கு நிறைய நிலதானம், திருவிளக்கு தானம், நெய்த்தானம் அளித்துள்ளனர்.
அவர்களின் பெயர்களைப் பார்ப்போம்:
நங்கை பூதிமாதேவடிகள், அறிஞ்சிக்கை ஆதித்தன் நம்பிராட்டியார்,
மேலும் அதிகாரிகள் பலரும் நிவந்தம் கொடுத்துள்ளனர் :
அவர்கள் பெயர்கள் இதோ :செம்பியன் ஏழுவரையன் பாழிநக்கன், தென்னவன் இளங்கோவேளாயினான மறவன் பூதியார், நங்கை கற்றளிபிராட்டியார், நக்க நறிஞ்சிகை மாராயன், வீரசோழ இளங்கோவரையன், மாறன் குடித்தலையாச்சான், சிறைமீட்டான் திருவேங்கடமுடையான்,
இவர்கள் அல்லாது ஊர்மக்கள் சிலரும்தானம் கொடுத்துள்ளனர்,
அவற்றில் சிலரதுபெயரைக் காண்போம் :
பாண்டிநாட்டு அல்லூருடையான் கவனப்பி, கிளிஞலூர் கிழவன் மாகன், புறத்து வெளார் மணவாட்டி அல்லியரசியார், கிழவன் கொலோத்துங்க சோழ விஜயபாலன்..
பெரும்பாலும் கோவிலுக்கு நிவந்தம் கொடுத்தல், மாலைசாற்றுதல், நந்தாவிளக்கு தானமளித்தல், கோவிலுக்குரிய நிலங்கள் அவற்றை பராமரிக்கும் ஊழியர்கள், உவச்சப்பணி, இவற்றின் குறிப்பே அதிகம் காணக்கிடைக்கிறது!
உத்தமசோழரின் 13ம் ஆட்சியாண்டில் சித்திரைவிசு, ஐப்பசி விசு நடத்த நிலதானம் கொடுத்துள்ளார். அதை ராஜராஜர் தனது 16 ஆம் ஆட்சியாண்டில் அதனை மேற்கோள்காட்டி விழா நடத்த மீண்டும் உத்தரவிடுகிறார், சுந்தரபாண்டியன் தனது 9வது ஆட்சியாண்டு கல்வெட்டில் அவரது அதிகாரியான கேரளாந்தக விழுப்பரையன் என்பவரது சிறைக்காவலிலிருந்து ஒருவர் தப்பிவிடுகிறார், கடமையை செய்யதவறிய அவரையும், அவரது மருகனையும், அவனது தம்பியையும் எவ்வாறு தண்டித்தார் சுந்தரபாண்டியர் என்ற குறிப்பும் உள்ளது!
அரைமணிநேரம் முடிந்தது, அர்ச்சகர் முறைக்க ஆரம்பித்தார். பின் எங்கள் ஆர்வத்தைப் பார்த்து மனமிறங்கி மூலஸ்தானத்தைப் பூட்டிவிட்டு, வளாக சாவியை நம்பிக்கையுடன் கொடுத்துவிட்டுச் சென்றார். வெயில் சுட்டெரித்தது! வெறுங்காலில் அவ்வப்போது நிழலில் ஒதுங்கி தேடலைத் தொடர்ந்தோம்.
சிற்ப சிறப்புகள் :
![]() |
| வீணைதாரர் |
..
![]() |
| பிக்ஷாடனர் |
![]() |
| நின்ற விநாயகர் |
மேலும் இங்கு உத்தமசீலி வாய்க்கால், ஆதிச்ச வாய்க்கால் என்று இருவாய்க்கால் இருந்ததற்கு கல்வெட்டு குறிப்புள்ளது!
12.30 ற்கு ஆரம்பித்த தேடல் 4 மணிவரை நீடித்தது!
அர்ச்சகரே நடைதிறக்க மீண்டும் வந்துவிட்டார்.
இதற்குமேல் தேடினால் அவ்வளவு உசிதமில்லை என்று!
அர்ச்சகருக்கு நன்றியுரைத்துவிட்டு மனநிறைவுடன் கிளம்பினோம்.
தடத்தின் அடுத்த பயணத்தில பொன்னியின் செல்வனின் கதாநாயகன் "வந்தியத்தேவன்" இறந்ததாய் புரளி கிளம்பிய (🤣) திருநெடுங்களத்தில் சந்திப்போம்.
நன்றி










பார்த்தி அருமை வாழ்த்துகள் பல
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete